Saturday, August 22, 2015

தேசிய அரசாங்கத்தால் தேசியஇனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் 

Dumintha Disanayaka
ஏ.ஜெயசூரியன் 
தேசியஇனப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. அமையும் தேசிய அரசாங்கத்தில் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பிரதி செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்புதிய பிரதி செயலாளர் பதவியேற்றாலும் இதில் எவ்வித சவால்களும் இருக்காது எனவும், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு பொதுத் தேர்தல் நடக்காத காரணத்தால் சுதந்திரக் கட்சிக்குள் மைத்திரி - மகிந்த என பிளவு ஏற்படாது. கடந்தகால தவறுகளை மறந்து புதிய தீர்வுக்காக அனைத்துக் கட்சிகளும் தேசிய அரசில் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்அதன் செவ்வி கீழ்வருமாறு;

கேள்வி-புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் முன்னணிக்கும் என பிரிக்கப்பட்டுள்ளதா?

பதில்-அவ்வாறு ஒன்றும் பிரிக்கப்படவில்லை. புரிந்துணர்வு அடிப்படையில் சுதந்திரக் கட்சியினரும் ஐக்கிய முன்னணியினரும் கைகோர்த்து இருக்கின்றோம். அமைச்சு பதவிகள் தொடர்பாக பேசப்பட்டுவருகின்றது.இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

கேள்வி-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக உங்களை உத்தியோகப்பூர்வமாக நியமிக்கவில்லை என்று கூறப்படுவது. உண்மையா?

பதில்-தேசிய அரசாங்கம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் பிரதி பொதுச் செயலாளர் என்ற அங்கீகாரத்துடனேயே நான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டேன். அந்தவகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நான்தான். ஏனையவர்கள் குறிப்பிடுவதை பொருட்படுத்த முடியாது.

கேள்வி-இரண்டு வருடங்கள் மட்டுமே தேசிய அரசாங்கம் நடைமுறையில் இருக்கும் என புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் காரணம் என்ன?

பதில்- இரண்டு வருடங்கள் என குறிப்பிட்டிருந்தாலும்கூட இருதரப்பும் விரும்பினால் அதனை நீடிக்கலாம். தேசிய அரசாங்கம் அனைத்து தேசிய கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்பட உருவாக்கப்பட்டது.

கேள்வி-தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அதிரடியாக மேற்கொண்ட மாற்றங்கள் தொடர்பாக உங்களது கருத்துக்கள் என்ன?

பதில்-கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்சியில் மாற்றங்களை எப்போது வேண்டுமானாலும் செய்யமுடியும். கட்சியின் யாப்புக்கு உட்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. கட்சியின் தலைவருக்கு மத்திய செயற்க்குழுவை ஒன்றுக்கூட்டவும் அதில் மாற்றங்களை கொண்டுவரவும் அதிகாரங்கள் இருக்கின்றன. அந்த சட்டவிதிகளுக்கமையவே மாற்றங்களை நாம் செய்தோம். இது சட்டவிரோதம் என்று கூறுவதற்கு ஒன்றுமில்லை.

கேள்வி-தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளருக்கு தேசிய பட்டியலில் இடம் வழங்கப்பட்டது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?

பதில்-தேர்தலில் தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்குவது சட்டத்துக்கு முரணானது அல்ல. தேசியப் பட்டியலில் தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கு நியமனம் வழங்குவது இது முதல் முறை அல்ல. நாங்கள் மட்டுமல்ல ஜே.வி.பி.கூட தேர்தலில் தோல்வியுற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கியுள்ளது. இது கட்சியின் ஒரு உரிமையாகவும் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன். இது தவறானது என நான் நினைக்கவில்லை.

கேள்வி-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிலர் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுவது உண்மையா?

பதில்-அவ்வாறு யாரும் குறிப்பிடவில்லை. ஆனால் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் சிலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். தனிப்பட்ட கருத்துக்களான இவற்றை கட்சியின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ளமுடியாது.

கேள்வி-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்ளவர்கள் தேசிய அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டிலும் இருக்கின்றார்களா?

பதில்-இதுவரைக்கும் உத்தியோகப்பூர்வமாக எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் எடுக்கும் முடிவாக இருந்தாலும் அதனை கட்சிக்கு முதலில் அறிவிக்கவேண்டும். அப்படிஎமக்கு எவரும் அறிவிக்கவில்லை. ஸ்ரீலங்கா கட்சியின் உறுப்பினர்களை நாம் ஒன்றுக்கூட்டி அனுமதிக்கேட்டபோது தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து உறுப்பினர்களும் அனுமதியளித்தனர். எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கேள்வி- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து
நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதிதாக எவரும் நியமிக்கப்பட்டுள்ளார்களா?

பதில்-கட்சியின் தலைவர் என்ற வகையில் கட்சியினுடைய மத்தியச் செயற்குழுவை மாற்றியமைக்கமுடியும். அந்த வகையிலேயே மாற்றியமைக்கப்பட்டது. எதிர்வரும் 25 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பெயரிடப்படுவர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் தலைவர் என்ற வகையில் சிலரை பெயரிட்டுள்ளார். அதேபோல புதிய தலைவரான மைத்திரிபால சிறிசேனவும் சிலரை பெயரிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பு அதிகாரங்களுக்கு அமைய அவர்கள் 25 பேரை பரிந்துரை செய்துள்ளார்கள்.

கேள்வி-இன்றும் மைத்திரி, மஹிந்த என இரண்டு தரப்புக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் செயற்படுகின்றனரா?

பதில்- மைத்திரி-மஹிந்த என இரண்டு தரப்புகள் செயற்படுகிறார்கள் என நான் நினைக்கவில்லை. அதற்கு பிரதான காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதற்கொண்டு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் முரண்பாடு இல்லையென கூறியுள்ளனர். அந்த வகையில் முரண்பாடுகள் இல்லை என்றே கூறவேண்டும். எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறப்போவதில்லை. எனவே, கட்சிக்குள் இரண்டு தரப்புக்கள் உருவாக வாய்ப்பில்லை. தேர்தல் காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒருதரப்பு செயற்பட்டது . ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு தெரிவிக்கவில்லை. தற்பொழுது அனைத்தும் முடிந்துவிட்டது. இனி தனியான கூட்டணிகளை அமைத்துக்கொண்டு எவரும் செயற்படமுடியாது. எதிர்வரும் 5 வருடங்களுக்கு பிளவு ஏற்படவாய்ப்பில்லை. கட்சியின் மிகப்பெரிய பலமாக இருப்பது கட்சியின் தலைவரே நாட்டின் ஜனாதிபதியாக இருப்பது ஆகும். ஜனாதிபதியை பலப்படுத்தி செயற்படுவதே கட்சிக்கு பலமாகும்.

கேள்வி-தேசியப்பட்டியலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஐக்கிய மக்கள் முன்னணிக்கென பங்கீடு இருக்கின்றதா?

பதில்-அவ்வாறு தேசியப்பட்டியலில் நியமனங்கள் பிரிக்கப்படவில்லை.


கேள்வி-சுதந்திரக் கட்சியின் செயலாளராக பொறுப்பேற்றுள்ள நீங்கள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக நீங்கள் எதனை கூறிப்பிடுகிறீர்கள்?

பதில்-இனப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய சக்தி தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற நாள் முதல் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்றவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நன்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்சியின் 64 ஆவது வருடாந்த மாநாடு பொலான்னறுவையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மேலும் கட்சியை பலப்படுத்தவுள்ளோம். செப்டெம்பர் 2 ஆம் திகதி புதிய வழிமுறைகள் தொடர்பாக புதிய திட்டங்களையும் வகுக்கவுள்ளோம்.

தேசிய அரசாங்கத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை பெறமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமின்றி டக்ளஸ் தேவானந்தா, மனோகணேசன், ஜே.வி.பி, போன்ற அனைவரையும் தேசிய அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டு செயற்படவுள்ளோம். புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதன் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.

கடந்தகால தவறான அனுபவங்களை மறந்து புதிய தீர்வுக்காக ஒன்றிணைவோம். எம்மால் மாறமுடியும் என கருதினால் அன்று தீர்வும் கிடைக்கும்.

கேள்வி-மைத்திரி அரசாங்கத்தின் கீழ் 100 நாள் செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேசிய அரசாங்கத்தில் விஷேட கொள்கைத் திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுமா?

பதில்-100 நாள் செயற்றிட்டத்துக்கு கீழ் பல செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் இன்று 100 நாள் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நாட்டின் இரு பிரதான கட்சிகள் என்ற வகையில் தேசிய அரசாங்கத்தில் இரண்டு கொள்கை திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதாவது தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் சுதந்திரக் கட்சி முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தையும் இணைத்து பொதுவான ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்துவோம். தனிக்கட்சிகளுக்காக மக்கள் வாக்களித்திருந்தபடியால் இருக் கட்சிகளும் முன்வைத்த கொள்கைகளில் பொதுவானவற்றை தேர்வு செய்யவுள்ளோம். 10 வருடங்களாக நாம் மேற்கொண்ட அபிவிருத்திகளை தொடர்வோம்.

கேள்வி-கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் தவறிழைத்தவர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் குற்றவாளிகளுக்கு எதிராக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா?

பதில்-கடந்த மஹிந்த அரசாங்கம் என்ற வரையறை இல்லாமல் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னரும், விசாரணைகள் குற்றவாளிகளுக்கெதிராக முன்னெடுக்கப்படும். கடந்த அரசாங்கம், அதற்கு முந்தைய அரசாங்கம், தற்போதைய அரசாங்கம் என அனைத்து அரசாங்கத்திலும் நடந்த குற்றங்களுக்கு எதிராக, ஊழல்வாதிகளுக்கெதிராக விசாரணை நடத்தமுடியும். ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி,ஜே.வி.பி என அனைத்து கட்சிகளுக்கெதிராகவும் மக்கள் முறைப்பாடுகள் தெரிவிக்கலாம்.

மத்திய ஆளுநருக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அது தொடர்பாகவும் விசாரிக்கப்படும். எதிர்காலத்தில் அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் இது நடைபெறாவிட்டால், நாம் இருக்கின்றோம் என மக்களுக்கு நினைவுப்படுத்திக்கொள்ள விரும்புகின்றோம்.

கேள்வி-தேசிய அரசாங்கத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் விடயம் என்ன?

பதில்-ஒரு இளைஞனாக தேசிய அரசாங்கம் என்ற மாற்றத்துக்கு நான் விருப்பம் தெரிவிக்கின்றேன். தமிழ், சிங்கள,முஸ்லிம் என்ற வேறுபாடின்றி இங்கு ஒன்றிணையவேண்டும். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மெய் பாதுகாவலர் இந்த தேர்தலில் கூட போட்டியிட்டார். ஆனால், அவர்கூட தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டார். அதாவது இந்த விடயத்தை பார்க்கும்போது தமிழ் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், இனவாதத்தை தோற்கடித்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். இது ஒரு நல்ல சகுணம் ஆகும். தேசிய ஒற்றுமை, அமைதி என்றெல்லாம் வாக்குகளை பெறுவதற்காக பேசுபவர்கள் இனவாதத்தையும் தோற்றுவிக்கின்றார்கள். ஆனால் இனி அது நடக்காது, ஜனநாயக அரசியல் ஒன்றை தோற்றுவிப்பதாக தமிழ் மக்கள் வைத்த வாக்குகள் தொடர்பாக நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இலங்கையில் இனவாத கட்சிகள் அனைத்துமே தோற்கடிக்கப்பட்டுள்ளது நல்ல சகுணமாகும். மூவின மக்களும் ஒன்றுப்பட்டு செயற்படுவதற்குரிய சந்தர்ப்பமாக தேசிய அரசாங்கத்தை நான் கருதுகிறேன்.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...